இந்த புத்தகத்தை படித்தது கூட ’அழகிய தவறு’ என்று தான் சொல்லவேண்டும். ‘உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்’ ஆகிய classic-களை இயக்கிய மகேந்திரனின் நாவல் என்ற எதிர்பார்ப்பில் இந்த ‘அழகிய தவறு’ புத்தக்தை வாங்கினேன். புத்தகம் வாங்கிய கணத்தில் ‘எழுதுவது வேறு, திரைப்பட இயக்கம் வேறு’ என்பதை மறந்துவிட்டேன். கதை அத்தனை மோசம் இல்லை என்றாலும், இதை எழுதியது - லட்சுமி / ரமணிசந்திரன் என்று போட்டு இருந்தால் நன்றாக இருந்தது என்று சொல்லியிருப்பேன். அவ்வளவு நாடக வாசனை. ஒரு வேளை இயக்குநர் மகேந்திரன் என்றதும் அவருடைய படங்கள் போல sensitive - ஆக இருக்கும் என்று ஏகத்துக்கும் எதிர்பார்த்துவிட்டேன் போல. Sensitive-ஆக இல்லை என்றாலும் கொஞ்சம் sensible-ஆக இருந்திருக்கலாம் என்ற ஆதங்கம் மேலோங்குகிறது. சொந்த வீட்டிலேயே கொத்தடிமையாக நடத்தப்படும் ரிக்கி என்கிற ரங்கநாதனுக்கு, கீதா-சித்தார்த் தம்பதிகள் மூலம் இதுவரை கிடைக்காத அன்பும் அரவணைப்பும் கிடைக்க, தன் இசை திறமையை உலகுக்கு காட்டி புகழின் ஏணியில் ஏற ஆரம்பிக்க அவனுடைய அரங்கேற்றம் ‘அழகிய தவறாக’ அமைகிறது. கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களும் (முன் பின் தெரியாதவர்கள் கூட) மூச்சு விடாமல் ‘ரிக்கி ரிக்கி...’ என்று கூவுவதும் ரிக்கி மீது அனுதாபமோ அன்பையோ ஏற்படுத்தாமல் ஒரு எரிச்சலையே ஏற்படுத்துகிறது. கதைப்படி முதல் முறையாக ரிக்கி மேடையேற போகிறான் ஆனால் அதற்குள் அவனை உலக புகழ் பெற்ற இசைக் கலைஞர் அளவுக்கு hype கொடுத்து, ஊட்டியே ரிக்கியின் கச்சேரியை கேட்க வழிகிறது (ஹோட்டல்களில் இடம் கிடைக்காமல் மக்கள் ஊட்டி Race Course-ல் கூடாரம் அடித்து தங்கினார்கள்) என்று வெத்து build up கொடுத்து இருப்பதன் மூலம், தன்னுடைய சினிமாக்கள் போல் அல்லாது இந்த நாவல் ஒரு ஹீரோயிஸம் உருவாக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் மகேந்திரன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடுப்படிக்கிறது. வெறும் 104 பக்கங்கள் இருந்த இந்த நாவல் 401 பக்கங்கள் கொண்டது போல ஜவ்வென்று ஒரு இழுவை உணர்வு.