பாரீஸுக்கு போ!!!
இது நான் படித்த 6வது ஜெயகாந்தனின் படைப்பு. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என்று அறிந்த பிறகே வாங்கினேன். மேல்நாட்டில் வாழ்ந்துவிட்டு பின் தன் தாய்நாட்டில் குடியேற விரும்பும் இசைக்கலைஞன் ஒருவன் கடைசியில் பாரீஸுக்கே போய்விடுவதாக முடிகிறது இதன் கதை. 1966-களில் எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய மேல்தட்டு சமூகத்தில் பழக்கவழக்கங்கள் ’நவீன முறை’ என்கிற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிக்கொண்டாலும், கருத்து ரீதியாக சில நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஜெயகாந்தன். ‘பாரீஸுக்கு போ’வில் ஜெயகாந்தன் வாழ்க்கையும் கலைகளும் நவீனமுற வேண்டும், அப்படி ஆகவேண்டுமென்றால் மனதளவில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று தன் கருத்தை நாவல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஜெயகாந்தனின் பாணியே கொஞ்சம் விஸ்தாரமாக எழுதுவது என்பதால் அவர் வார்த்தைகளை மனதளவில் படமாக விரித்து ரசிக்கவும், அவருடைய கருத்துகளை ஒத்துக்கொள்ளவும், மறுக்கவும் நிறைய வாய்ப்பளிக்கிறார்.