Kalki
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Ponniyin Selvanகடந்த சில வாரங்களில் அடுத்தடுத்த தஞ்சை பயணங்கள், அதுவும் அந்த இடங்களோடு நெருக்கமாக இருசக்கர வாகன பயணம்..... அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே “பொன்னியின் செல்வன்” படிக்க ஆரம்பித்துவிட்டதால் திடீரென்று தஞ்சையோடு ஒருவித பூர்வீக பந்தம் இருப்பது போல ஒரு உணர்வு. குறிப்பாக இம்முறை “பொன்னியின் செல்வன்” படிக்கும்போது (கடந்த முறையைவிட) இன்னும் அதிக பரிச்சயம் தோன்றியது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அதில் திருவையார் குறித்த வர்ணனைகள் வரும்போது உண்மையாகவே திருவாரூர் சாலைகள் நினைவுக்கு வந்தன. நான் என்ன சொல்லவருகிறேன் என்பது “பொன்னியின் செல்வன்” படிக்கும் / படித்தவர்களுக்கு புரியும்.


என் பாலா மாமா சொன்னது போல, இரண்டு - மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ‘பொன்னியின் செல்வன்’ படிப்பது ஒருவித பழக்கமாகவே ஆகிவிட்டது. முதல் முறை - 2005ல், இரண்டாவது முறை - 2008 இறுதியில் & மூன்றாவது முறை இப்போது 2011-ல். அதுமட்டும் அல்ல ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாக தோன்றுவது மட்டுமல்ல, அந்தந்த சமயங்களுக்கு புதிய முகங்களை உருவகப்படுத்திக்கொண்டு படிப்பதால் இன்னும் புதிதாக, பரவசமாக இருக்கிறது. உதாரணம் - முதல் முறை படித்தபோது எனக்கு வானதி கதாபாத்திரத்துக்கு “மஞ்சு வாரியர்”-ஐ உருவகப்படுத்திக்கொண்டேன். பின்பு இம்முறை படித்தபோது “தமன்னா” சரியாக இருப்பார் என்று தோன்றியது. இதுவரை முதல் பாகத்தை படித்துள்ளேன். இன்னும் 4 பாகங்கள் உள்ளன. இது இன்னும் 2-3 மாதங்களுக்கு என்னை engaged - ஆக வைத்திருக்கும்.

வானதிமுதல் பாதியில் என்ன நடந்திருக்கிறது? வந்தியத்தேவன் தனது தோழரும், இளவரசருமான ஆதித்த கரிகாலர் கொடுத்த ஓலைகளை எடுத்துக்கொண்டு தஞ்சைக்கும், பழையாறைக்கும் புறப்படுகிறான். வழியில் கொடும்பாளூரில் தங்கும் போது அங்கே பழுவேட்டரையர்கள் தலைமையில் ஆட்சியில் அடுத்து மதுராந்தகத்தேவரை அமரச்செய்ய சதியாலோசனை நடப்பதை காண்கிறான். அதே சமயம் தன்னை போலவே இந்த விஷயத்தில் ஆழ்வார்க்கடியானும் துப்பு துலக்குவதை காண்கிறான். குடந்தை ஜோதிடர் வீட்டில் இளவரசி குந்தவையையும், வானதியையும் சந்திக்க நேர்கிறது. அங்கிருந்து தஞ்சைக்கு போகும் வழியில் பெரிய பழுவேட்டயரின் இளம் மனைவி நந்தினியின் அறிமுகம் கிடைக்கிறது. அதே சமயம் தஞ்சை கோவிலுக்கு அர்ச்சனை செய்யும் சேந்தன் அமுதனின் நட்பு கிடைக்கிறது.

அவள் உதவியின் மூலம் தஞ்சை அரண்மனைக்குள் நுழைந்து நோய்வாய்ப்பட்டு கிடக்கும் அரசர் சுந்தரச்சோழரை பார்த்து ஓலையை கொடுத்து விடுகிறான். அவன் மீது சந்தேகம் கொண்டு சின்ன பழுவேட்டையர் வந்தியத்தேவனை சிறை பிடிக்க முயற்சிக்க, அவரிடமிருந்து தப்பி நந்தினியின் மாளிகைக்குள் நுழைந்துவிடுகிறான். அங்கே நந்தினியின் மற்ற சூழ்ச்சி முகம் தெரிய, அன்று இரவு சுரங்க பாதை வழியாக தப்பிக்கிறான் வந்தியத்தேவன். அந்த இரவில் ராஜரீக சதியின் பாகமாக பல நிகழ்ச்சிகளை காண நேர்கிறது நம் வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு.

நடுவே பலரின் மூலம் பண்டைய தமிழகத்தின் வரலாற்றையும், அரசியல் அமைப்புகளையும், தமிழகத்தின் வளமையையும், அழகையும், வாழ்வியலையும், கதை நடக்கும் சூழலில் உள்ள அரசியல் மாற்றங்களையும் மிக அழகாக, அதே நேரம் விஸ்தாரமாகவும் விவரித்து வாசகர்களாகிய நம்மை சோழர் காலத்துக்கு தனது எழுத்து என்னும் கால இயந்தரத்தின் மூலம் கொண்டுபோகிறார் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

Ponniyin Selvan Android application

ஒரு வழியாக குந்தவையை பார்த்து மற்ற ஓலையையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள நினைக்கும் வந்தியத்தேவனுக்கு மேலும் ஒரு வேலை கொடுக்கிறாள் இளவரசி குந்தவை. அது இலங்கையில் யுத்தம் புரிந்துக்கொண்டிருக்கும் இளவரசர் அருள்மொழி வர்மருக்கு வல்லவரையன் மறுமொழி ஓலை கொண்டு கொடுக்கவேண்டும். அதை ஏற்று வல்லவரையன் இலங்கைக்கு புறப்படுகிறான்.

இப்போது தான் கதை கோடிக்கரைக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. இந்த பாகமும், அடுத்த பாகமும் தமிழகத்தின் கடற்கரைகளிலும், இலங்கை காடுகளிலும் மிக அழகாக இருக்கும். எனவே I am excited and eagerly looking forward.

சில நாட்களுக்கு முன்பு மணிரத்னம் தனது அடுத்த படத்தை இந்த “பொன்னியின் செல்வ”னை தழுவி எடுப்பதாகவும், இதை ரூ. 200 கோடியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவும், மணிரத்னமும் இணைவதாகவும், வசனத்தை எழுத எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ரூ. 2 கோடி பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. சமீபத்தில் சென்னை புத்தக கண்காட்சிக்கு மணியும் ஜெயமோகனும் ஒன்றாக வந்து சுற்றியது இந்த செய்தியை பலப்படுத்துவதாக இருந்தது. இதை படித்ததும் கொஞ்சம் வருத்தமாகவும் (மணி மீது எனக்கு “ராவண”னுக்கு பிறகு அபார நம்பிக்கை), ஒரு பக்கம் ஆறுதலாகவும் (மணியின் visual sense அபாரம்) இருந்தது. 3000 பக்கங்களை 2.5 - 3 மணி நேரங்களில் சுருக்க இயலாது. கமல்ஹாசன் கூட படமாக்க முயற்சித்து தோல்வியுற்ற மாபெரும் படைப்பு இது. ஆனால் சமீபத்திய செய்திப்படி மணி இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு விக்ரம் / விஜய் / விஷால்-ஐ வைத்து contemporary படம் ஒன்றை யோசித்து வருவதாக கேள்வி. அப்பாடா!!! பொன்னியின் செல்வன் பிழைத்தார்.

இம்முறை எனது கதாபாத்திரங்களுக்கான முகங்கள்:-

1. வந்தியத்தேவன் - “பருத்திவீரன்” கார்த்தி (கடந்த முறை - இளம் வயது கமல்ஹாசன்)
2. ஆதித்த கரிகாலன் - விக்ரம் (கடந்த முறை - இளம் வயது சரத்குமார்)
3. பழுவேட்டரையர் - (கடந்த முறையும், இம்முறையும்) நெப்போலியன். தசாவதாரத்தில் பார்த்ததிலிருந்து எனது தேர்வு பலப்பட்டுவிட்டது.
4. குந்தவை - “அருந்ததி” அனுஷ்கா ஷெட்டி (கடந்த முறை - ஷோபனா)
5. நந்தினி - “மீரா ஜாஸ்மின்” (கடந்த முறை - ரம்யா கிருஷ்ணன், ஆனால் கல்கி விவரித்திருப்பது போல உருண்டை முகம் அல்ல)
6. ஆழ்வார்க்கடியான் - (கடந்த முறையும், இம்முறையும்) ஒய். ஜி. மகேந்திரன்
7. பூங்குழலி - (கடந்த முறையும், இம்முறையும்) நவ்யா நாயர்
8. வானதி - தமன்னா (கடந்த முறை - மஞ்சு வாரியர்)
9. அருண்மொழி வர்மன் - சூர்யா (வாரணம் ஆயிரம் தந்த நம்பிக்கை), கடந்த முறை - “இளம் வயது சிவக்குமார்”
10. சுந்தரச்சோழர் - (மறைந்த மலையாள நடிகர்) ”டும் டும் டும்” முரளி
11. மந்திரவாதி ரவிதாசன் - “அடர்ந்த தாடியுடன்” எம். என். நம்பியார்.

இம்முறை எனது Kindle-ல் படிப்பதால் இதுவும் ஒரு புது அனுபவமாகவே உள்ளது. எனது facebook status-ல் போட்டது போல - “எனது Kindle இப்போது போட்ட காசுக்கு மேலே உழைக்கிறது”. போதாக்குறைக்கு ‘பொன்னியின் செல்வன்’ Android application வடிவில் கிடைக்கிறது. அதை எனது அலைபேசியில் ஏற்றிக்கொண்டதால், இரவு நேரத்தில் பயணிக்கும் போது கூட படித்துக்கொண்டு இருக்கிறேன்.

{oshits} வாசகர்கள், எனது இந்த “பொன்னியின் செல்வன்” படித்த பரவசத்தை அறிந்துள்ளனர்!